4.4 திருவாரூர்
பண் - காந்தாரம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
பாடிளம் பூதத்தி னானும்
    பவளச் செவ் வாய்வண்ணத் தானுங்
கூடிள மென்முலை யாளைக்
    கூடிய கோலத்தி னானும்
ஓடிள வெண்பிறை யானும்
    ஒளிதிகழ் சூலத்தி னானும்
ஆடிளம் பாம்பசைத் தானும்
    ஆரூ ரமர்ந்தஅம் மானே.
1
நரியைக் குதிரைசெய் வானும்
    நரகரைத் தேவுசெய் வானும்
விரதங்கொண் டாடவல் லானும்
    விச்சின்றி நாறுசெய் வானும்
முரசதிர்ந் தானை முன்னோட
    முன்பணிந் தன்பர்கள் ஏத்த
அரவரைச் சாத்திநின் றானும்
    ஆரூ ரமர்ந்தஅம் மானே.
2
நீறுமெய் பூசவல் லானும்
    நினைப்பவர் நெஞ்சத்து ளானும்
ஏறுகந் தேறவல் லானும்
    எரியுரை மேனியி னானும்
நாறு கரந்தையி னானும்
    நான்மறைக் கண்டத்தி னானும்
ஆறு சடைக்கரந் தானும்
    ஆரூ ரமர்ந்தஅம் மானே.
3
கொம்புநல் வேனி லவனைக்
    குழைய முறவல்செய் தானுஞ்
செம்புனல் கொண்டெயில் மூன்றுந்
    தீயெழக் கண்சிவந் தானும்
வம்புநற் கொன்றையி னானும்
    வாட்கண்ணி வாட்டம தெய்த
அம்பர ஈருரி யானும்
    ஆரூ ரமர்ந்தஅம் மானே.
4
ஊழி யளக்கவல் லானும்
    உகப்பவர் உச்சியுள் ளானுந்
தாழிளஞ் செஞ்சடை யானுந்
    தண்ணமர் திண்கொடி யானுந்
தோழியர் தூதிடை யாடத்
    தொழுதடி யார்கள் வணங்க
ஆழி வளைக்கையி னானும்
    ஆரூ ரமர்ந்தஅம் மானே.
5
ஊர்திரை வேலையுள் ளானும்
    உலகிறந் தொண்பொரு ளானுஞ்
சீர்தரு பாடலுள் ளானுஞ்
    செங்கண் விடைக்கொடி யானும்
வார்தரு பூங்குழ லாளை
    மருவி யுடன்வைத் தவனும்
ஆதிரை நாளுகந் தானும்
    ஆரூ ரமர்ந்தஅம் மானே.
6
தொழற்கங்கை துன்னிநின் றார்க்குத்
    தோன்றி யருளவல் லானுங்
கழற்கங்கை பன்மலர் கொண்டு
    காதல் கனற்றநின் றானுங்
குழற்கங்கை யாளையுள் வைத்துக்
    கோலச் சடைக்கரந் தானும்
அழற்கங்கை ஏந்தவல் லானும்
    ஆரூ ரமர்ந்தஅம் மானே.
7
ஆயிரந் தாமரை போலும்
    ஆயிரஞ் சேவடி யானும்
ஆயிரம் பொன்வரை போலும்
    ஆயிரந் தோளுடை யானும்
ஆயிர ஞாயிறு போலும்
    ஆயிர நீண்முடி யானும்
ஆயிரம் பேருகந் தானும்
    ஆரூ ரமர்ந்தஅம் மானே.
8
வீடரங் காநிறுப் பானும்
    விசும்பினை வேதி தொடர
ஓடரங் காகவைத் தானும்
    ஓங்கியோ ரூழியுள் ளானுங்
காடரங் காமகிழ்ந் தானுங்
    காரிகை யார்கள் மனத்துள்
ஆடரங் கத்திடை யானும்
    ஆரூ ரமர்ந்தஅம் மானே.
9
பையஞ் சுடர்விடு நாகப்
    பள்ளிகொள் வானுள்ளத் தானுங்
கையஞ்சு நான்குடை யானைக்
    கால்விர லாலடர்த் தானும்
பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப்
    புகழ்புரிந் தார்க்கருள் செய்யும்
ஐயஞ்சின் அப்புறத் தானும்
    ஆரூ ரமர்ந்தஅம் மானே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.5 திருவாரூர் - பழமொழி
மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த
    மேனியான் தாள்தொ ழாதே
உய்யலா மென்றெண்ணி உறிதூக்கி
    யுழிதந்தென் உள்ளம் விட்டுக்
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ
    மயிலாலும் ஆரூ ரரைக்
கையினாற் றொழா தொழிந்த
    கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே.
1
என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்
    டென்னையோர் உருவ மாக்கி
இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட்
    டென்னுள்ளங் கோயி லாக்கி
அன்பிருத்தி அடியேளைக் கூழாட்கொண்
    டருள்செய்த ஆரூ ரர்தம்
முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக்
    காக்கைப்பின் போன வாறே.
2
பெருகுவித்தென் பாவத்தைப் பண்டெலாங்
    குண்டர்கள்தஞ் சொல்லே கேட்டு
உருகுவித்தென் உள்ளத்தின் உள்ளிருந்த
    கள்ளத்தைத் தள்ளிப் போக்கி
அருகுவித்துப் பிணிகாட்டி ஆட்கொண்டு
    பிணிதீர்த்த ஆரூ ரர்தம்
அருகிருக்கும் விதியின்றி அறமிருக்க
    மறம்விலைக்குக் கொண்ட வாறே.
3
குண்டானாய்த் தலைபறித்துக் குவிமுலையார்
    நகைகாணா துழிதர் வேனைப்
பண்டமாப் படுத்தென்னைப் பால்தலையிற்
    றெளித்துத்தன் பாதங் காட்டித்
தொண்டெலா மிசைபாடத்த தூமுறுவல்
    அருள்செய்யும் ஆரூ ரரைப்
பண்டெலாம் அறியாதே பனிநீராற்
    பரவைசெயப் பாவித் தேனே.
4
துன்னாகத் தேனாகித் துர்ச்சனவர்
    சொற்கேட்டுத் துவர்வாய்க் கொண்டு
என்னாகத் திரிதந்தீங் கிருகையேற்
    றிடவுண்ட ஏழை யேன்நான்
பொன்னாகத் தடியேனைப் புகப்பெய்து
    பொருட்படுத்த ஆரூ ரரை
என்னாகத் திருத்தாதே ஏதன்போர்க்
    காதனாய் அகப்பட் டேனே.
5
பப்போதிப் பவணனாய்ப் பறித்ததொரு
    தலையோடே திரிதர் காட்டி
ஒப்போட வோதுவித்தென் உள்ளத்தின்
    உள்ளிருந்தங் குறுதி காட்டி
அப்போதைக் கப்போதும் அடியவர்கட்
    காரமுதாம் ஆரூ ரரை
எப்போது நினையாதே இருட்டறையின்
    மலடுகறந் தெய்த்த வாறே.
6
கதியொன்றும் அறியாதே கண்ணழலத்
    தலைபறித்துக் கையில் உண்டு
பதியொன்று நெடுவீதிப் பலர்காண
    நகைநாணா துழிதர் வேற்கு
மதிதந்த ஆரூரில் வார்தேனை
    வாய்மடுத்துப் பருகி உய்யும்
விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க
    மின்மினித்தீக் காய்ந்த வாறே.
7
பூவையாய்த் தலைபறித்துப் பொறியற்ற
    சமண்நீசர் சொல்லே கேட்டுக்
காவிசேர் கண்மடவார்க் கண்டோடிக்
    கதவடைக்குங் கள்வ னேன்றன்
ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை
    யாட்கொண்ட ஆரூ ரரைப்
பாவியேன் அறியாதே பாழூரிற்
    பயிக்கம்புக் கெய்த்த வாறே.
8
ஒட்டாத வாளவுணர் புரம்மூன்றும்
    ஓரம்பின் வாயின் வீழக்
கட்டானைக் காமனையுங் காலனையுங்
    கண்ணினொடு காலின் வீழ
அட்டானை ஆரூரில் அம்மானை
    ஆர்வச்செற் றக்கு ரோதந்
தட்டானைச் சாராதே தவமிருக்க
    அவஞ்செய்து தருக்கி னேனே.
9
மறுத்தானோர் வல்லரக்கன் ஈரைந்து
    முடியினொடு தோளுந் தாளும்
இறுத்தானை எழில்முளரித் தவிசின்மிசை
    இருத்தான்றன் தலையி லொன்றை
அறுத்தானை ஆரூரில் அம்மானை
    ஆலாலம் உண்டு கண்டங்
கறுத்தானைக் கருதாதே கரும்பிருக்க
    இரும்புகடித் தெய்த்த வாறே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.19 திருவாரூர்
பண் - சீகாமரம்
சூலப் படையானைச் சூழாக வீழருவிக்
கோலத்தோட் குங்குமஞ்சேர் குன்றெட் டுடையானைப்
பாலொத்த மென்மொழியாள் பங்கனைப் பாங்காய
ஆலத்தின் கீழானை நான்கண்ட தாரூரே.
1
பக்கமே பாரிடங்கள் சூழப் படுதலையிற்
புக்கவூர்ப் பிச்சையேற் றுண்டு பொலிவுடைத்தாய்க்
கொக்கிறகின் தூவல் கொடியெடுத்த கோவணத்தோ
டக்கணிந்த அம்மானை நான்கண்ட தாரூரே.
2
சேய உலகமுஞ் செல்சார்வு மானானை
மாயப்போர் வல்லானை மாலைதாழ் மார்பனை
வேயொத்த தோளியர்தம் மென்முலைமேல் தண்சாந்தின்
ஆயத் திடையானை நான்கண்ட தாரூரே.
3
ஏறேற்ற மாவேறி எண்கணமும் பின்படர
மாறேற்றார் வல்லரணஞ் சீறி மயானத்தின்
நீறேற்ற மேனியானாய் நீள்சடைமேல் நீர்ததும்ப
ஆறேற்ற அந்தணனை நான்கண்ட தாரூரே.
4
தாங்கோல வெள்ளெலும்பு பூண்டுதம் ஏறேறிப்
பாங்கான வூர்க்கெல்லாஞ் செல்லும் பரமனார்
தேங்காவி நாறுந் திருவாரூர்த் தொன்னகரில்
பூங்கோயி லுள்மகிழ்ந்து போகா திருந்தாரே.
5
எம்பட்டம் பட்ட முடையானை யேர்மதியின்
நும்பட்டஞ் சேர்ந்த நுதலானை அந்திவாய்ச்
செம்பட் டுடுத்துச் சிறுமா னுரியாடை
அம்பட் டசைத்தானை நான்கண்ட தாரூரே.
6
போழொத்த வெண்மதியஞ் சூடிப் பொலிந்திலங்கு
வேழத் துரிபோர்த்தான் வெள்வளையாள் தான்வெருவ
ஊழித்தீ யன்னானை ஓங்கொலிமாப் பூண்டதோர்
ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரே.
7
வஞ்சனையா ரார்பாடுஞ் சாராத மைந்தனைத்
துஞ்சிருளில் ஆடல் உகந்தானைத் தன்தொண்டர்
நெஞ்சிருள் கூரும் பொழுது நிலாப்பாரித்
தஞ்சுடராய் நின்றானை நான்கண்ட தாரூரே.
8
காரமுது கொன்றை கடிநாறு தண்ணென்ன
நீரமுது கோதையோ டாடிய நீள்மார்பன்
பேரமுத முண்டார்கள் உய்யப் பெருங்கடல்நஞ்
சாரமுதா வுண்டானை நான்கண்ட தாரூரே.
9
தாட வுடுக்கையன் தாமரைப்பூஞ் சேவடியன்
கோடலா வேடத்தன் கொண்டதோர் வீணையினான்
ஆடரவக் கிண்கிணிக்கால் அன்னனோர் சேடனை
ஆடுந்தீக் கூத்தனை நான்கண்ட தாரூரே.
10
மஞ்சாடு குன்றடர வூன்றி மணிவிரலாற்
றுஞ்சாப்போர் வாளரக்கன் றோள்நெரியக் கண்குருதிச்
செஞ்சாந் தணிவித்துத் தன்மார்பில் பால்வெண்ணீற்
றஞ்சாந் தணிந்தானை நான்கண்ட தாரூரே.
11
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.20 திருவாரூர்
பண் - சீகாமரம்
காண்டலேகருத் தாய்நினைந்திருந்
    தேன்மனம்புகுந் தாய்கழலடி
பூண்டுகொண் டொழிந்தேன்
    புறம்போயி னாலறையோ
ஈண்டுமாடங்கள் நீண்டமாளிகை
    மேலெழுகொடி வானிளம்மதி
தீண்டிவந் துலவுந்
    திருவாரூ ரம்மானே.
1
கடம்படந்நட மாடினாய்களை
    கண்ணெனக்கொரு காதல்செய்தடி
ஒடுங்கி வந்தடைந்
    தேனொழிப்பாய் பிழைப்பவெல்லாம்
முடங்கிறால்முது நீர்மலங்கிள
    வாளைசெங்கயல் சேல்வரால்களி
றடைந்த தண்கழனி
    அணியாரூ ரம்மானே.
2
அருமணித்தடம் பூண்முலை
    அரம்பையரொ டருளிப்பாடியர்
உரிமையிற் றொழுவார்
    உருத்திர பல்கணத்தார்
விரிசடைவிர திகளந்தணர்
    சைவர்பாசுப தர்கபாலிகள்
தெருவினிற் பொலியுந்
    திருவாரூ ரம்மானே.
3
பூங்கழல்தொழு தும்பரவியும்
    புண்ணியாபுனி தாவுன்பொற்கழல்
ஈங்கிருக்கப் பெற்றேன்
    என்னகுறை யுடையேன்
ஓங்குதெங்கிலை யார்கமுகிள
    வாழைமாவொடு மாதுளம்பல
தீங்கனி சிதறுந்
    திருவாரூ ரம்மானே.
4
நீறுசேர்செழு மார்பினாய்நிரம்
    பாமதியொடு நீள்சடையிடை
ஆறுபாய வைத்தாய்
    அடியே அடைந்தொழிந்தேன்
ஏறிவண்டொடு தும்பியஞ்சிற
    கூன்றவிண்ட மலரிதழ்வழி
தேறல்பாய்ந் தொழுகுந்
    திருவாரூ ரம்மானே.
5
அளித்துவந்தடி கைதொழுமவர்
    மேல்வினைகெடு மென்றிவையகங்
களித்துவந் துடனே
    கலந்தாடக் காதலராய்க்
குளித்துமூழ்கியுந் தூவியுங்குடைந்
    தாடுகோதையர் குஞ்சியுள்புகத்
தெளிக்குந் தீர்த்தமறாத்
    திருவாரூ ரம்மானே.
6
திரியுமூவெயில் தீயெழச்சிலை
    வாங்கிநின்றவ னேயென்சிந்தையுட்
பிரியுமா றெங்ஙனே
    பிழைத்தேயும் போகலொட்டேன்
பெரியசெந்நெற் பிரம்புரிகெந்த
    சாலிதிப்பிய மென்றிவையகத்
தரியுந் தண்கழனி
    யணியாரூ ரம்மானே.
7
பிறத்தலும்பிறந் தாற்பிணிப்பட
    வாய்ந்தசைந்துட லம்புகுந்துநின்
றிறக்குமா றுளதே
    இழித்தேன் பிறப்பினைநான்
அறத்தையேபுரிந் தமனத்தனாய்
    ஆர்வச்செற்றக்கு ரோதநீக்கியுன்
திறத்தனாய் ஒழிந்தேன்
    திருவாரூ ரம்மானே.
8
முளைத்தவெண்பிறை மொய்சடையுடை
    யாயெப்போதுமென் னெஞ்சிடங்கொள்ள
வளைத்துக் கொண்டிருந்தேன்
    வலிசெய்து போகலொட்டேன்
அளைப்பிரிந்த அலவன்போய்ப்புகு
    தந்தகாலமுங் கண்டுதன்பெடை
திளைக்குந் தண்கழனித்
    திருவாரூ ரம்மானே.
9
நாடினார்கம லம்மலரய
    னோடிரணியன் ஆகங்கீண்டவன்
நாடிக் காணமாட்டாத்
    தழலாய நம்பானைப்
பாடுவார்பணி வார்பல்லாண்டிசை
    கூறுபத்தர்கள் சித்தத்துள்புக்குத்
தேடிக் கண்டுகொண்டேன்
    திருவாரூ ரம்மானே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.21 திருவாரூர் திருவாதிரைத் திருப்பதிகம்
முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே
பத்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னே
வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
1
நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும்
பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்
மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்
கணியான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
2
வீதிகள் தோறும் வெண்கொடி யோடுவி தானங்கள்
சோதிகள் விட்டுச் சுடர்மா மணிகள் ஒளிதோன்றச்
சாதிக ளாய பவளமு முத்துத் தாமங்கள்
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
3
குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்
பிணங்கித் தம்மிற் பித்தரைப் போலப் பிதற்றுவார்
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
4
நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்
பலரு மிட்ட கல்ல வடங்கள் பரந்தெங்குங்
கலவ மஞ்ஞை காரென் றெண்ணிக் களித்துவந்
தலம ராரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
5
விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்
தம்மாண் பிலராய்த் தரியார் தலையான் முட்டுவார்
எம்மான் ஈசன் எந்தை எனப்பன் என்பார்கட்
கம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
6
செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்
மைந்தர்க ளோடு மங்கையர் கூடிம யங்குவார்
இந்திர னாதி வானவர் சித்தர் எடுத்தேத்தும்
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
7
முடிகள் வணங்கி மூவா தார்கண் முன்செல்ல
வடிகொள் சேய்த்தோள் வான்அர மங்கையர் பின்செல்லப்
பொடிகள் பூசிப் பாடுந் தொண்டர் புடைசூழ
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
8
துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும்
இன்பம் நும்மை யேத்து நாள்கள் என்பாரும்
நும்பின் எம்மை நுழையப் பணியே என்பாரும்
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
9
பாரூர் பௌவத தானைப் பத்தர் பணிந்தேத்தச்
சீரூர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பார்ந்
தோரூர் ஒழியா துலகம் எங்கும் எடுத்தேத்தும்
ஆரூ ரன்றன் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.52 திருவாரூர் - திருநேரிசை
படுகுழிப் பவ்வத் தன்ன
    பண்டியைப் பெய்த வாற்றாற்
கெடுவதிம் மனிதர் வாழ்க்கை
    காண்டொறுங் கேது கின்றேன்
முடுகுவர் இருந்துள் ஐவர்
    மூர்க்கரே இவர்க ளோடும்
அடியனேன் வாழ மாட்டேன்
    ஆரூர்மூ லட்ட னீரே.
1
புழுப்பெய்த பண்டி தன்னைப்
    புறமொரு தோலால் மூடி
ஒழுக்கறா ஒன்ப துவாய்
    ஒற்றுமை யொன்று மில்லை
சழக்குடை இதனுள் ஐவர்
    சங்கடம் பலவுஞ் செய்ய
அழிப்பனாய் வாழ மாட்டேன்
    ஆரூர்மூ லட்ட னீரே.
2
பஞ்சின்மெல் லடியி னார்கள்
    பாங்கரா யவர்கள் நின்று
நெஞ்சில்நோய் பலவுஞ் செய்து
    நினையினும் நினைய வொட்டார்
நஞ்சணி மிடற்றி னானே
    நாதனே நம்ப னேநான்
அஞ்சினேற் கஞ்ச லென்னீர்
    ஆரூர்மூ லட்ட னீரே.
3
கெண்டையந் தடங்கண் நல்லார்
    தம்மையே கெழும வேண்டிக்
குண்டராய்த் திரிதந் தைவர்
    குலைத்திடர்க் குழியில் நூக்கக்
கண்டுநான் தரிக்க கில்லேன்
    காத்துக்கொள் கறைசேர் கண்டா
அண்டவா னவர்கள் போற்றும்
    ஆரூர்மூ லட்ட னீரே.
4
தாழ்குழல் இன்சொல் நல்லார்
    தங்களைத் தஞ்ச மென்று
ஏழையே னாகி நாளும்
    என்செய்கேன் எந்தை பெம்மான்
வாழ்வதேல் அரிது போலும்
    வைகலும் ஐவர் வந்து
ஆழ்குழிப் படுத்த வாற்றேன்
    ஆரூர்மூ லட்ட னீரே.
5
மாற்றமொன் றருள கில்லீர்
    மதியிலேன் விதியி லாமை
சீற்றமுந் தீர்த்தல் செய்யீர்
    சிக்கன வுடைய ராகிக்
கூற்றம்போல் ஐவர் வந்து
    குலைத்திட்டுக் கோகு செய்ய
ஆற்றவுங் கில்லேன் நாயேன்
    ஆரூர்மூ லட்ட னீரே.
6
உயிர்நிலை யுடம்பே காலா
    உள்ளமே தாழி யாகத்
துயரமே ஏற்ற மாகத்
    துன்பக்கோ லதனைப் பற்றிப்
பயிர்தனைச் சுரிய விட்டுப்
    பாழ்க்குநீர் இறைத்து மிக்க
அயர்வினால் ஐவர்க் காற்றேன்
    ஆரூர்மூ லட்ட னீரே.
7
கற்றதேல் ஒன்று மில்லை
    காரிகை யாரோ டாடிப்
பெற்றதேற் பெரிதுந் துன்பம்
    பேதையேன் பிழைப்பி னாலே
முற்றினால் ஐவர் வந்து
    முறைமுறை துயரஞ் செய்ய
அற்றுநான் அலந்து போனேன்
    ஆரூர்மூ லட்ட னீரே.
8
பத்தனாய் வாழ மாட்டேன்
    பாவியேன் பரவி வந்து
சித்தத்துள் ஐவர் தீய
    செய்வினை பலவுஞ் செய்ய
மத்துறு தயிரே போல
    மறுகுமென் னுள்ளந் தானும்
அத்தனே அமரர் கோவே
    ஆரூர்மூ லட்ட னீரே.
9
தடக்கைநா லைந்துங் கொண்டு
    தடவரை தன்னைப் பற்றி
எடுத்தவன் பேர்க்க ஓடி
    இரிந்தன பூத மெல்லாம்
முடித்தலை யனைத்துந் தோளும்
    முறிதர இறையே யூன்றி
அடர்த்தருள் செய்த தென்னே
    ஆரூர்மூ லட்ட னீரே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.53 திருவாரூர் - திருநேரிசை
குழல்வலங் கொண்ட சொல்லாள்
    கோலவேற் கண்ணி தன்னைக்
கழல்வலங் கொண்டு நீங்காக்
    கணங்களக் கணங்க ளார
அழல்வலங் கொண்ட கையான்
    அருட்கதிர் எறிக்கும் ஆரூர்
தொழல்வலங் கொண்டல் செய்வான்
    தோன்றினார் தோன்றி னாரே.
1
நாகத்தை நங்கை அஞ்ச
    நங்கையை மஞ்ஞை யென்று
வேகத்தைத் தவிர நாகம்
    வேழத்தின் உரிவை போர்த்துப்
பாகத்தின் நிமிர்தல் செய்யாத்
    திங்களை மின்னென் றஞ்சி
ஆகத்திற் கிடந்த நாகம்
    அடங்கும்ஆ ரூர னார்க்கே.
2
தொழுதகங் குழைய மேவித்
    தோட்டிமை யுடைய தொண்டர்
அழுதகம் புகுந்து நின்றார்
    அவரவர் போலும் ஆரூர்
எழிலக நடுவெண் முத்த
    மன்றியும் ஏர்கொள் வேலிப்
பொழிலகம் விளங்கு திங்கட்
    புதுமுகிழ் சூடி னாரே.
3
நஞ்சிருள் மணிகொள் கண்டர்
    நகையிருள் ஈமக் கங்குல்
வெஞ்சுடர் விளக்கத் தாடி
    விளங்கினார் போலும் மூவா
வெஞ்சுடர் முகடு தீண்டி
    வெள்ளிநா ராச மன்ன
அஞ்சுடர் அணிவெண் டிங்கள்
    அணியும்ஆ ரூர னாரே.
4
எந்தளிர் நீர்மை கோல
    மேனியென் றிமையோ ரேத்தப்
பைந்தளிர்க் கொம்ப ரன்ன
    படர்கொடி பயிலப் பட்டுத்
தஞ்சடைத் தொத்தி னாலுந்
    தம்மதோர் நீர்மை யாலும்
அந்தளிர் ஆகம் போலும்
    வடிவர்ஆ ரூர னாரே.
5
வானகம் விளங்க மல்கும்
    வளங்கெழு மதியஞ் சூடித்
தானக மழிய வந்து
    தாம்பலி தேர்வர் போலும்
ஊனகங் கழிந்த ஓட்டில்
    உண்பதும் ஒளிகொள் நஞ்சம்
ஆனகம் அஞ்சும் ஆடும்
    அடிகள்ஆ ரூர னாரே.
6
அஞ்சணை கணையி னானை
    அழலுற அன்று நோக்கி
அஞ்சணை குழலி னாளை
    அமுதமா அணைந்து நக்கு
அஞ்சணை அஞ்சும் ஆடி
    ஆடர வாட்டு வார்தாம்
அஞ்சணை வேலி ஆரூர்
    ஆதரித் திடங்கொண் டாரே.
7
வணங்கிமுன் அமரர் ஏத்த
    வல்வினை யான தீரப்
பிணங்குடைச் சடையில் வைத்த
    பிறையுடைப் பெருமை யண்ணல்
மணங்கம ழோதி பாகர்
    மதிநிலா வட்டத் தாடி
அணங்கொடி மாட வீதி
    ஆரூரெம் அடிக ளாரே.
8
நகலிடம் பிறர்கட் காக
    நான்மறை யோர்கள் தங்கள்
புகலிட மாகி வாழும்
    புகலிலி இருவர் கூடி
இகலிட மாக நீண்டங்
    கீண்டெழில் அழல தாகி
அகலிடம் பரவி யேத்த
    அடிகள்ஆ ரூர னாரே.
9
ஆயிரந் திங்கள் மொய்த்த
    அலைகடல் அமுதம் வாங்கி
ஆயிரம் அசுரர் வாழும்
    அணிமதில் மூன்றும் வேவ
ஆயிரந் தோளும் மட்டித்
    தாடிய அசைவு தீர
ஆயிரம் அடியும் வைத்த
    அடிகள்ஆ ரூர னாரே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.102 திருவாரூர் - திருவிருத்தம்
குலம்பலம் பாவரு குண்டர்முன்
    னேநமக் குண்டுகொலோ
அலம்பலம் பாவரு தண்புனல்
    ஆரூர் அவிர்சடையான்
சிலம்பலம் பாவரு சேவடி
    யான்றிரு மூலத்தானம்
புலம்பலம் பாவரு தொண்டர்க்குத்
    தொண்டராம் புண்ணியமே.
1
மற்றிட மின்றி மனைதுறந்
    தல்லுணா வல்லமணர்
சொற்றிட மென்று துரிசுபட்
    டேனுக்கு முண்டுகொலோ
விற்றிடம் வாங்கி விசயனோ
    டன்றொரு வேடுவனாய்ப்
புற்றிடங் கொண்டான்றன் தொண்டர்க்குத்
    தொண்டராம் புண்ணியமே.
2
ஒருவடி வின்றிநின் றுண்குண்டர்
    முன்னமக் குண்டுகொலோ
செருவடி வெஞ்சிலை யாற்புரம்
    அட்டவன் சென்றடையாத்
திருவுடை யான்றிரு வாரூர்த்
    திருமூலத் தானன்செங்கட்
பொருவிடை யானடித் தொண்டர்க்குத்
    தொண்டராம் புண்ணியமே.
3
மாசினை யேறிய மேனியர்
    வன்கண்ணர் மொண்ணரைவிட்
டீசனை யேநினைந் தேசறு
    வேனுக்கும் உண்டுகொலோ
தேசனை ஆரூர்த் திருமூலத்
    தானனைச் சிந்தைசெய்து
பூசனைப் பூசரர் தொண்டர்க்குத்
    தொண்டராம் புண்ணியமே.
4
அருந்தும் பொழுதுரை யாடா
    அமணர் திறமகன்று
வருந்தி நினைந்தர னேயென்று
    வாழ்த்துவேற் குண்டுகொலோ
திருந்திய மாமதில் ஆரூர்த்
    திருமூலத் தானனுக்குப்
பொருந்துந் தவமுடைத் தொண்டர்க்குத்
    தொண்டராம் புண்ணியமே.
5
வீங்கிய தோள்களுந் தாள்களு
    மாய்நின்று வெற்றரையே
மூங்கைகள் போலுண்ணு மூடர்முன்
    னேநமக் குண்டுகொலோ
தேங்கமழ் சோலைத்தென் னாரூர்த்
    திருமூலத் தானன்செய்ய
பூங்கலு லானடித் தொண்டர்க்குத்
    தொண்டராம் புண்ணியமே.
6
பண்ணிய சாத்திரப் பேய்கள்
    பறிதலைக் குண்டரைவிட்
டெண்ணிற் புகழீசன் றன்னருள்
    பெற்றேற்கு முண்டுகொலோ
திண்ணிய மாமதில் ஆரூர்த்
    திருமூலத் தானனெங்கள்
புண்ணியன் றன்னடித் தொண்டர்க்குத்
    தொண்டராம் புண்ணியமே.
7
கரப்பர்கள் மெய்யைத் தலைபறிக்
    கச்சுகம் என்னுங்குண்டர்
உரைப்பன கேளாதிங் குய்யப்போந்
    தேனுக்கும் உண்டுகொலோ
திருப்பொலி ஆரூர்த் திருமூலத்
    தானன் திருக்கயிலைப்
பொருப்பன் விருப்பமர் தொண்டர்க்குத்
    தொண்டராம் புண்ணியமே.
8
கையி லிடுசோறு நின்றுண்ணுங்
    காதல் அமணரைவிட்
டுய்யும் நெறிகண் டிங்குய்யப்
    போந்தேனுக்கு முண்டுகொலோ
ஐயன் அணிவயல் ஆரூர்த்
    திருமூலத் தானனுக்குப்
பொய்யன் பிலாவடித் தொண்டர்க்குத்
    தொண்டராம் புண்ணியமே.
9
குற்ற முடைய அமணர்
    திறமது கையகன்றிட்
டுற்ற கருமஞ்செய் துய்யப்போந்
    தேனுக்கும் உண்டுகொலோ
மற்பொலி தோளான் இராவணன்
    றன்வலி வாட்டுவித்த
பொற்கழ லானடித் தொண்டர்க்குத்
    தொண்டராம் புண்ணியமே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.103 திருவாரூர் - திருவிருத்தம்
வேம்பினைப் பேசி விடக்கினை
    யோம்பி வினைபெருக்கித்
தூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றந்
    துணையென் றிருத்திர்தொண்டீர்
ஆம்பலம் பூம்பொய்கை ஆரூர்
    அமர்ந்தான் அடிநிழற்கீழ்ச்
சாம்பலைப் பூசிச் சலமின்றித்
    தொண்டுபட் டுய்ம்மின்களே.
1
ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன்
    ஆரூர் அகத்தடக்கிப்
பாரூர் பரிப்பத்தம் பங்குனி
    உத்திரம் பாற்படுத்தா
னாரூர் நறுமலர் நாதன்
    அடித்தொண்டன் நம்பிநந்தி
நீரால் திருவிளக் கிட்டமை
    நீணா டறியுமன்றே.
2
பூம்படி மக்கலம் பொற்படி
    மக்கலம் என்றிவற்றால்
ஆம்படி மக்கல மாகிலும்
    ஆரூர் இனிதமர்ந்தார்
தாம்படி மக்கலம் வேண்டுவ
    ரேல்தமிழ் மாலைகளால்
நாம்படி மக்கலஞ் செய்து
    தொழுதுய் மடநெஞ்சமே.
3
துடிக்கின்ற பாம்பரை ஆர்த்துத்
    துளங்கா மதியணிந்து
முடித்தொண்ட ராகி முனிவர்
    பணிசெய்வ தேயுமன்றிப்
பொடிக்கொண்டு பூசிப் புகுந்தொண்டர்
    பாதம் பொறுத்தபொற்பால்
அடித்தொண்டன் நந்தியென் பானுளன்
    ஆரூர் அமுதினுக்கே.
4
கரும்பு பிடித்தவர் காயப்பட்
    டாரங்கோர் கோடலியால்
இரும்பு பிடித்தவர் இன்புறப்
    பட்டார் இவர்கள்நிற்க
அரும்பவிழ் தண்பொழில் சூழணி
    ஆரூர் அமர்ந்தபெம்மான்
விரும்பு மனத்தினை யாதொன்று
    நானுன்னை வேண்டுவனே.
5
கொடிகொள் விதானங் கவரி
    பறைசங்கங் கைவிளக்கோ
டிடிவில் பெருஞ்செல்வ மெய்துவர்
    எய்தியும் ஊனமில்லா
அடிகளும் ஆரூர் அகத்தின
    ராயினும் அந்தவளப்
பொடிகொண் டணிவார்க் கிருளொக்கு
    நந்தி புறப்படிலே.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
இப்பதிகத்தில் எட்டாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
8
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
9
சங்கொலிப் பித்திடு மின்சிறு
    காலைத் தடவழலில்
குங்கிலி யப்புகைக் கூட்டென்றுங்
    காட்டி இருபதுதோள்
அங்குலம் வைத்தவன் செங்குரு
    திப்புன லோடஅஞ்ஞான்
றங்குலி வைத்தான் அடித்தா
    மரையென்னை ஆண்டனவே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com